Sunday, September 6, 2015

இனிய பிறந்தநாள் வாழ்த்து!!!

வாழிய வாழிய பல்லாண்டு
வளம்பெறவேண்டும் அன்போடு
இன்பங்கள் வந்துடன்தங்கிடவும்
துன்பங்கள் தூர விலகிடவும்,

எண்ணிய எண்ணங்கள் ஈடேறி
என்றும் வாழ்வில் மகிழ்ந்திடவும்
வரும்நாள் எல்லாம் வளமாக
மனநலம் என்றும் சிறப்பாக!

பொன்தமிழாலே கவிபாடி
பொதுநல வாழ்வில் புகழ்சூடி
கண்ணிமை காக்கும் கருனையுடன்
வாழ்ந்திட நானும் வாழ்த்துகிறேன்!!
 இனிய பிறந்த நாள் வாழ் த்துக்கள்!!!

Sunday, August 23, 2015

கலாமின் கனவை நனவாக்க!!

கலாமின் கனவை நனவாக்க!!
                             .......0.........
அனுதினம் கனவு காண்கலாம்
அவைகளை நனவாய் ஆக்கலாம்!
வாருங்கள் அறிவுரை கேட்கலாம்
உழைத்திடும் கைகளை கோற்கலாம்!

வீட்டினில் மரங்களை வளர்க்கலாம்
நாட்டிற்கு அனைவரும் உழைக்கலாம்!
அக்கினிச் சிறகினை விரிக்கலாம்
வல்லரசாய்  நாம்  உதிக்கலாம்!

வாருங்கள் நாம் பசி தணிக்கலாம்
உலகில் நம்நிலை கனிக்கலாம்!
ஏனிந்த நிலையென நினைக்கலாம்
அதைமாற்றிடத் தினமும் உழைக்கலாம்!

சாதிகள் மதங்களை வெறுக்கலாம்
சமத்துவ விதைகளை விதைக்கலாம்!
அனைவரும் சம்மென மதிக்கலாம்
அதற்கென வழிமுறை விதிக்கலாம்!

பிரிவினை வாதத்தை ஒதுக்கலாம்
ஒற்றுமை உயர்வென போதிக்கலாம்!
நாட்டில் நதிகளை இணைக்கலாம்
விளையும் பொருள்களை பெருக்கலாம்!

இதைத்தான் சொன்னார் அப்துல்கலாம்
அவர்சொன்னதைச் செய்தால் சாதிக்கலாம்!
கனவினை நனவாய் ஆக்கலாம்
பெரும்புகழ் நமக்கே சேர்க்கலாம்!!

Sunday, August 2, 2015

கலாம் அவர்களுக்குக் கண்ணீர்(பூக்கள்)அஞ்சலி!!

 கலாம் அவர்களுக்குக் கண்ணீர்(பூக்கள்)அஞ்சலி!!
                                              -000000-
பேருலகம் முழுவதுமே பெருந்தவிப்பில் இங்கிருக்க
ஆகாயக் கப்பலிலே யார்வந்து உனைஅழைத்தார்?

ஓராயிரம் கோடி  இளம் மனங்கள் காத்திருக்க
தேரேரிப்போனாயோ தென்னகத்துப் பெருமகனே!

வல்லரசாய்நாம்வாழ வழிகள்பல சொல்லிவிட்டு
சொல்லவொன்னா துயர்தந்து போனதெங்கேபொன்மகனே!

நீசொன்ன படிதானே கனவெல்லாம் கண்டிருந்தோம்
கனவெல்லாம்நனவாகும்  முன்போன மாயமென்ன?

அன்னைமடி போயுறங்கும் ஆசையிலே போனாயோ?
மன்னவனே நீமுடிந்தால் மறுபடியும் வாராயோ!

சின்னவிழிப் பார்வையிலே நீ சிரிக்கும் சிரிப்பழகு
கண்ணிருந்து மறையாமல் கலங்கிடத்தான் வைக்கிறதே!

சம்பவமாய்ப் பிறப்பதனை நினைக்காமல் நீயதனைச்
சரித்திரமாய் மாற்று எனச் சளைக்காமல் சொல்லிவிட்டு

பெறாமல் பெற்றெடுத்த பிள்ளைகளைத் தவிக்கவிட்டு
சரித்திரமாய் நீமாறி பேக்கரும்பு போனதென்ன!

படிக்காமல் ஒருபிள்ளை பாரதத்தில் இல்லையெனும்
படியான உன்சொல்லை என்னாளும் போற்றிடவும்

சளைக்காமல் நீசொன்ன தத்துவத்தை என்னாளும்
மறக்காமல் நெஞ்சிருத்தி வல்லரசாய் மாற்றிடுவோம்!

கண்ணிருந்து வடிகின்ற கண்ணீரின் பூக்களையே
காணிக்கையாய்த் தானுங்கள் காலடியில்வைக்கின்றோம்!

அன்னைமடி போய் உறங்கும் ஆசையிலேபோனாயோ
மன்னவனே நீமுடிந்தால் மறுபடியும் வாராயோ!!

Thursday, July 30, 2015

கண்ணீர் அஞ்சலி!!!

கண்ணீர் அஞ்சலி!!!
                    -----000-----
அருந்தமிழ் ஞானியே!
அனு விஞ்ஞானியே!
ஆண்டவனுக்கு
ஆலோசனை சொல்ல
ஆள் இல்லாத தாலோ
உன்னை
அழைத்துக்கொண்டான்!

கல்மனம் கொண்ட காலனே
இந்தியாவே
அழுதுகொண்டு இருப்பது
உன் இறுகிய மனதிற்குத்
தெரியவா போகிறது?

அன்பின் சிகரமே
அப்துல் கலாமே!
உன்
பிரிவின் பிடியில்
சிக்கித் தவிக்கும் எங்களுக்கு
ஆண்டவனால் கூட
ஆறுதல் சொல்ல முடியாது!!

நீங்கள் காட்டிய
அன்பிற்கும் பாசத்திற்கும்
நாங்கள்என்ன கைமாறு
செய்யப் போகிறோம்?
ஆகவேஉங்கள்
சாதனைகளைப்போற்றி
போதனைகளை ஏற்று
வல்லரசாய் நம் நாட்டை
வளர்க்க உறுதி ஏற்று
எங்களுக்காக உழைத்த
உங்கள் ஆன்மா
சாந்தி அடைய
எங்கள்
கண்ணீர் மலர்களைக்
காணிக்கை ஆக்குகிறோம்!!

Sunday, July 12, 2015

சந்தனப்படகில் குங்குமநிலவு!!!

 சந்தனப்படகில் குங்குமநிலவு!!!

>>>>௦<<<<
நெற்றியது கடலாக விரிந்தாடுது-அதில்
கற்றைமுடி மேகமென உருண்டோடுது!
பற்றியெந்தன் மனமதனைக் கவிபாடுது-காதல்
முற்றியதால் நெஞ்சமது குதிபோடுது!!

கடலலையாய் இருபுருவம் மிதந்தாடுது -காதல்
விடுகதையாய்க் கண்ணிரண்டும் கதைபேசுது!
மடல்வாழைக் கழுத்தழகேபொன்நகையானது-அவள்
துடிப்பான செவ்விதழே புன்னகை யானது!

கன்னங்களோ மாங்கனியின் நிறமானது -கலை
வண்ணங்களோ அவளிடத்தில் கையேந்துது!
மின்னலெனக் காதணிகள் ஒளிவீசுது-காதல்
சின்னமெனும் வெண்ணிலவோ தலைசாயுது!

மையெழுதும் இருவிழிகள் மீனானது-காதல்
கவியெழுத இமைகளது தூதானது!
பொய்யெழுதும் கவிதை மனம் மெய்யானது-அழகு
தெய்வமெனக் கவியனுளம் கைகூப்புது!!

இருபுருவ மத்தியிலோ சந்தனப்படகு-அதில்
ஊர்கோலம் போகுதம்மா குங்குமநிலவு!
கருங்கூந்தல் ஊஞ்சலிலே மல்லிகை மலரு-உடன்
சேர்ந்தாடி மயங்குதம்மா கவிஞனின்மனது!!    

Saturday, July 4, 2015

உயிர்க்குருவி!!!

 உயிர்க்குருவி!!!
முழுதாய்ச்சிவந்தன இருவிழிகள்
முத்தாய் விழுந்தன நீர்த்துளிகள்!
பித்தாய்ப்புகழைத் தினம் நினைந்து
சிட்டாய்வாழ்வது என் உயிரு !

செத்தால் விழுவது உடல்கூடு
துணையாய்வருவது புகழ் ஏடு!
கண்ணில் ஆயிரம் கலக்கம் உண்டு
கவிதையில்அதனைத் தினம்பாடு!

புகழுக்குயிரைக் கொடுக்கும் உள்ளம்
புழுதியில் வாழ்ந்து மாயாது!
பொருளுக்கு ஏங்கும்பேய்நினைவை
என்றும் என்மனம் நினையாது!

செத்தாலிந்தப் பிள்ளைதனைப்
பெற்றோர் கூட மறந்திடுவார்!
உற்றாருறவினர் கூட இந்த
உலகிற்காக அழுதுவைப்பார்!

செத்தால்போகும் திசை ஏது?
தெரிந்தவர் உலகில்  யாருமில்லை
ஆயினும் இருக்கும் காலம்வரை
அழியாப்புகழுடன் தானிருப்பேன்!

அஞ்சேன்பிறர்சொல்கேட்டென்றும்
துஞ்சேன் பழிமேல் வருமாயின்!
எஞ்சிய புகழைச் சுமந்து கொண்டு
எறிவேன்  இந்த உடல் கூட்டை!

பிறர்பொருள்தருவார் என்றெண்ணி
பரிந்துரைசொல்ல நான்போகேன்!
பிறர்பொருள்தன்மேலாசைகொண்டு
பேயாய்அலைந்து நான்சாகேன்!

பிறந்தான்வாழ்ந்தான்பெரும்புகழைச்
சுமந்தான்போனானெனப்போவேன்!
அடிகளை எண்ணி வைப்பவன்நான்
கன்னித்தமிழப் பரம்பரை நான்!

களங்கம் இல்லாப் பார்வை யுடன்
காவியம்  பாடும் கவிஞன் நான்!
ஆயிரம் பேர்வந்து சொன்னாலும்
அடியவன் நேர்மை மாறாது!

உடலுல்லவரையில் கண்ணியத்தை
உயிராய்மதித்து வாழ்பவன்நான்!
காசுப்பேய்கள் வாழுமிந்த
கழிசடை உலகில் பிறந்துவிட்டேன்!

எண்ணம் எப்படி அப்படித்தான்
அவன்சொல்லும் செயலும்வாய்மொழியும்!
யோக்கியன் ஆயிரம் நன்மை செய்தும்
அயோக்கியன் ஆகத்தான்தெறிவான்!

அழும்பு வாழ்வுவாழ்பவனோ
அகில உலகப்புகழ் பெறுவான்!
நேர்மைக்கு இங்கு இடமில்லை
நல்மனதிற்கு வாழ்வுமிங்கில்லை!

தேகம் மாய்ந்து வீழ்வதற்கு
சந்தேகம் தானேகொடும்நஞ்சு!
குடியைக்கெடுத்துவீழ்த்திவிட்டு
நொடியில்மறைவதும்அதுதானே!

ஊருக்காக நானில்லை என்
பேருக்காகத்தானிருப்பேன்!
ஆயிரம் கவிதை எழுதி விட்டு
அழும்பில் வாழ்பவன்நான் இல்லை!

உடலைவிட்டு உயிர்க்குவி
உயரப்பறந்துபோய்விட்டால்
ஊரார்வாய்கள் அத்தனை யும்
உண்மை க்கவிஞனின்புகழ்பாடும்!

மயிரை நீத்தால் மான்கவரி
உயிரை மாய்த்து வீழவதுபோல்
மானம் நீத்தால் இவ்வுலகின்
மண்ணில் வீழ்ந்துமாண்டிடுவேன்!

என்னைநம்பி வருவோர்க்கு
என்றும் நான் தான் புகழ் ஏணி!
என்னை வதைத்து வாழ்ந்தாலும்
எனக்கென்ன நான் ஒருஞானி!!

வளர்தமகளைப்போல் எல்லா
வாலிபப் பெணகளை நினைக்கின்ற
உள்ளம் உலகில் எங்குமில்லை
உண்மை இதிலே பொய்யுமில்லை!

கற்றேனில்லை பெருங்கல்வி
ஆயினும்  கவிஞன் சொல்லுறுதி !
விற்றவனில்லை பொய்ம்மை களைப்
பெற்றேன் பெருமை பொய்யில்லை!

மதுவிடம் மயக்கம் கொண்ட  வனும்
மாதிடம் விளக்கம் கண்டவனும்
புகழிடம் பெற்று வாழுகிற
பொய்ம்மை உலகினை வெறுக்கின்றேன்!

அழிவிடம் கொண்டு சேர்க்கின்ற
கழிவிடம்தனில் போய்நான்சேரேன்!
புகழிடம் கொண்டு சேர்க்கின்ற
பொதுவழிதனில்தான் நான் போவேன்!

சூடும்சொரணையும் நெஞ்சிலுண்டு
பாடும் கவியும் நாவில் உண்டு!
மேடும் குழியும் நானறிவேன்
வாழும்வழியும் நானறிவேன்!

நல்லானொருவன் நெஞ்சமதை
நாயினும் கீழாய் எண்ணி நிதம்
வில்லாலடித்துத் தின்றாலும்
சொல்லாலடித்துப் புதைத்தாலும்

புதைத்த இந்த பூமிதன்னில்
விதைத்த அவனின் மேனியிலே
முளைத்த புல்லும் மேலோங்கி
உரத்த குரலில் புகழ்பாடும்!!

வாய்மை ஒன்றே வர்த்தகனின்
விளைந்த கொள் முதல் ஆகிவிட்ட
பொய்ம்மை உலகின்புறக்கடையில்
உண்மை சிறைபட்டு கிடக்கின்றதே!

தூய்மை எண்ணம் தவறாகி
துன்பக்கடலில் மிதக்காது
எண்ணம் முழுதும்  மெய்யாகி
எடுப்பார்கைப்பிள்ளை ஆகாது !

பற்று இல்லா மனிதனவன்
பாதம்  நடந்த பூமிதனில்
புல்லும் பூண்டும் முளைக்காது
புழுவும் பூச்சியும் செல்லாது!

புத்தன் வாழ்வில்புகழ் விளைந்தால்
எத்தன் வாழ்வில் எது விளையும்?
பித்தம் தலைக்குள் ஏறிவிட்டால்
சித்தம் வினைக்குள் மூழ்கி விடும்!

ஆற்றுநீரில் பினம் கிடந்தால்
ஊற்றைத்தோண்டி நீர்குடிப்பான்!
சேற்றுக்குழியில்  செம்பிருந்தால்
எடுத்துக்கழுவி மனைசேர்ப்பான்!

போகும்வழியில் புதர் இருந்தால்
மாற்று வழியில் ஊர் கடப்பான்!
சாவின் பிடிதனில்மீண்டுவிட
தரணி யில் ஏதும் வழி உண்டோ?

பிறந்த வன் செழித்து வாழ்வதுவும்
வாழ்ந்தவன் முதிர்ந்து சாவதுவும்
உண்மை  நியதி என்றாலும்
உண்மை வாழ்வு  பொய்யாமோ?

ஆகையினாலே புவி மீதில்
அன்பால் சிறந்து வாழ்வோனும்
அறத்தால் உயர்ந்து நிற்போனும்
பாவங்கள் செய்யாதிருப்போனும்

எல்லா உயிரும் தம்முயிர்போல்
எண்ணிக் குணநலம் வாழ் வோனும்
மண்ணில் புதைந்து மறைந்தாலும்
மாம்புகழ் மட்டும் மறையாது!!!            

Thursday, June 18, 2015

இதுவா சுதந்திரம்?

ஆயிரங்கோடி இன்பங்கள் தேடி
அனுதினம் மனிதன் தவம் இருந்தான்!
மேவியகோடி துன்பங்கள் சூடி
தினம் தினம் மேனிச்சுகமிழந்தான்!

காரியவாதி ஆகிய மனிதன்
செய்திடும் செயலில் நிலைகுலைப்பான்!
காந்தியவாதி ஆகியமனிதன்
காசின்றிச் செத்தே உயிரிழப்பான்!

தேசியவாதம் பேசிய மனங்கள்
போனது எங்கே நாம்அறியோம்!
தேசியகீதம் பாடிய நாமோ
பாடிய உடனே பொருள் மறந்தோம்!

அரசியல்வாதி எழுதிய கணக்கில்
ஓட்டெனத்தானே நாம் இருப்போம்!
இல்லம் தேடி இலவசம் வந்தால்
ஓட்டெனத்திருப்பி நாம்கொடுப்போம்!

லஞ்சம் வாங்கிச் சேர்த்தான் பொருளெனச்
சொல்லும் யோக்கிதை நமக்கில்லை!
நாட்டைப்பற்றிய கவலை நெஞ்சில்
கொஞ்சம் கூட நமக்கில்லை!

சாதியவாதம் பேசிடும் மனிதன்
நச்சென நம்மை தரம்பிரிப்பான்!
மோதியசாதிக் கலவரங்கண்டு
பாரதமாதா தலை குனிவாள்!!

பெண்ணேகாவல் தெய்வம் நமக்கெனக்
கோவிலில் அழகிய சிலைவைப்போம்
கருவிலிருப்பது பெண்னெனக்கண்டால்
களைத்திட நாமே பணம் கொடுப்போம்!

காசின்றிச்சோறு கோவிலில் உண்டு
கடும்தவம் செய்யத்தேவையில்லை
யாசகம் தனிலேகாசுகள் சேரும்
மதுவதன் போதைக்கு அலைச்சலில்லை!!

உழைப்பின்றிக் காசும் வீடின்றிச்சோறும்
கிடைத்திடக் கழனியில் யார் உழைப்போம்!
ஊருக்கோர் மடம் உறங்கிட வருதாம்
விளைத்திட இனிமேல் யார் போவோம்?  

Wednesday, June 10, 2015

 காதல் சீதனம் !!!
வில்லாக வளைகின்ற பொல்லாத புருவத்தில்
சொல்லாத கதை சொல்லும் பெண்மை!-அது
நில்லாமல் வடிக்கின்ற கள்ளான காதலினால்
கொல்லாமல் கொல்லுதடா எம்மை!

அதிகாலை வேளையிலே சுதிசேர்க்கும் ராகத்தால்
மதிமயக்கும் பாடலவள் எனக்கு!-அந்த
மதியழகுப் பூமகளை மனதார நேசித்த
கதையழகாய்ச் சொல்லவா உனக்கு?

அழகான முகத்தோடு கொடியான  இடையோடு
அவள்நடக்கும் நடையழகே அழகு!-அந்த
முழுதானநிலவுக்கு  பலியான சாதியினால்
வழிமாறிப் போனதட உலகு!

சின்ன இடை அழகும் சிஙகார நடை அழகும்
பின்னாமல் என்னெஞ்சைப் பின்னும்!-அந்த
பின்னலிலேவருகின்ற கண்ணான காதலினை
எண்ணியெண்ணி எந்தன்மனம்துள்ளும்!

மங்காத ஒளியோடு சிங்கார மையெழுதிச்
சிரிக்கின்ற கண்களடா அவைகள்!-தினம்
தூங்காத விழியோடு துடிக்கின்ற என்மனதின்
துயரங்கள் போக்கும் அந்த இமைகள்!

செவ்வாழை நிறமாக செம்பருத்திப் பூவாக
சிவந்திருக்கும் அவளழகு இதழ்கள்!-உலகு
ஒவ்வாத பேரழகை  ஒருகோடிதான்பெற்று
மலர்ந்திருக்கும் பொன் அழகுமலர்கள்!

மின்னுகிற அவள் அழகுகன்னத்தைக் கண்டாலே
எண்ணங்கள் எங்கெங்கோ பறக்கும் !-அதன்
வண்ணங்கள் தருமழகை கணகளால்பருகிவிட
நெஞ்சமதில்காதல் மதுசுரக்கும்!

செத்தாலும் மறக்காத முத்தான காதலினை
மத்தாப்பு பூவாக்கி வைப்பாள்!-அன்பு
வித்தாலே என்னாளும் மலர்கி்ன்ற சொத்தான
முத்தத்தில் எனையென்றும் நனைப்பாள்!

தாங்காத வேதனையில் தவித்தாலுமென்னெஞ்சை
மங்காத நிலவாக்கி வைப்பாள்!-துன்பம்
தாங்காத என்மனதை தளிர்கின்ற அழகான
தங்கமென என்னாளும் வைப்பாள்!

படகாகி நான்காதல் கடல் தாண்டிப் போகையிலே
துடுப்பாக அவள்வந்து நிற்பாள்!-நான்
நான் முடமாகிப்போனாலும் திடமாக என்வாழ்வை
திசைமாற்றி  என்னாளும்  வைப்பாள்!

நானின்றி அவளில்லை அவளின்றி நானில்லை
என்றெண்ணி வாழ்ந்திருந்தபோது-ஒரு
நாளோடுமுடிகின்ற கனவானகாதலுக்கு
வந்ததடா பிரிவு என்னும் தூது!

உறவென்ற சொல்லுக்குப் பொருளொன்று தருவதற்குப்
பிரிவொன்று வந்ததம்மா  எனக்கு!-அந்தப்
பிரிவதனைச் செந்தமிழில் கவியாக உரைப்பதற்கு
போதாது இந்த மனம் எனக்கு!

பன்னீராய் வடிகின்ற தண்ணீரைத் தருகின்ற
சுனையாகித்தான் வாழ்ந்தோம் அன் று!-அந்த
சுனை ஆடிவிளையாட மதயானை வந்ததனால்
வினையாகித்தான்போனோம் இன்று!

நெஞ்சோடு விளையாடும் பொன்னான காதலினால்
பன்னீரில் குளித்திருந்தோம் அன்று!-சாதி
நஞ்சோடும் சாக்கடையில் மிதக்கின்ற மனிதர்களால்
கண்ணீரில் குளிக்கின்றோம் இன்று!

அவனோடு நீபோனால் உன்னோடு உயிர்போகும்
என்றவளைச் சொல்கின்ற சொல்லும்-மகளை
உயிரோடு தீயிட ஊரோடு ஊர் சேரும்
அவலங்கள் நான் எங்கே சொல்ல?

கொல்லுகிற சாதிகளைக் கொண்டுவந்து வைத்தவர்க்கு
நெஞ்சில்நீதி நியாயம் ஏதும் இ்ல்லையா?-காதல்
நெஞ்சங்களை அள்ளிவந்து கொள்ளியிடத் துடிப்பவர்க்கு
மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லையா?

ஓடுகிற ரத்தமது எல்லோர்க்கும் சிவப்புத்தான்
எங்கிருந்து வந்தது இந்த சாதி?மூச்சில்
ஓடுகிற தென்றலது எல்லோர்க்கும் ஒன்றேதான்
எதற்கையா தேவையில்லா நீதி?

மேல்சாதி என்றே நீ மென்மையாகத் தின்றலும்
மலமாகக் கழிவதென்ன சந்தனமா?-பல
நூல்கற்று முன்னேறிப் பட்டங்கள் பெற்றாலும்
கீழ்சாதி உனக்கென்றும் தெருப்பினமா?

தனிமனித சுதந்திரத்தின் தத்துவத்தை அறியாமல்
தரங்கெட்டுத் திரியாதே மட மனிதா!-வாழ்வில்
இனி மனதில் சமத்துவத்தை அறியாமல் நீ வாழ்ந்தால்
வந்துவிடும் தண்டனைகள் சீதனமாய்!!

சாதிமதபேதமின்றி சமமாகவாழுகின்ற
புது உலகை நாமிங்கு படைப்போமா?-மனம்
காதல்கொண்டு மணம்முடிக்கும் புதுமனமாந்தருக்கு
சீதனமாய் அவ்வுலகைக் கொடுப்போமா?


Sunday, May 31, 2015

தூது போ குயிலே!!

தங்கத்தாமரைத்தளிர் முகமதனை
கவியிவன் கண்கள் தேடுது!
தங்கத்தமிழ்மலர் பேசமறந்திட
என்விழிகளும் இங்கேவாடுது!

வின்னில் பகலொளி விளக்கைப்போலே
மின்னிடும் வான்வெளி மீன்களே!
என்னிடம் கொஞ்சம் பேசச்சொல்லி
பெண்ணிடம் தூது போங்களே!

தூங்காதிருவிழி தாங்காமனது
தனிமையில் இங்கு தவிக்கிது!
மங்களமலரின் மஞ்சத்தில் மனது
மயங்கிட தினமும் துடிக்கிது!

வானில்வட்டம் போடும் அழகு
வண்ணப்பறவைக் கூட்டங்களே!
கன்னம்குழியச் சிரிக்கும்அந்த
மான்விழிமங்கையைக் காட்டுங்களே!

கண்களிரண்டும் கருநிறவண்டாய்
மின்னுமஅவள்முகம் கண்டாயா?
கருநிறக்குயிலே கவியிவன் தனிமையில்
வாடுதல் நீபோய்ச் சொன்னாயா?

கண்ணழகி!!!


கருவண்டு போலிரண்டு
விழிகண்டு நெஞ்சம்
தேனுண்ட பொன்வண்டு
போல்வானில் துஞ்சும்!!

இருபுருவம் வில்லென்று
மனம்கண்டு  கொண்டு
அன்பென்ற சொல்லொன்றை
தாவென்று கெஞ்சும்!!

இமையிரண்டு சிட்டென்று
விழியிரண்டில் பறக்க
அதுகண்டு என்மனதில்
காதல்மது சுரக்க!!1

பூவென்று பொன்வண்டு
விழியிரண்டை நெருங்க
போவென்று பொன்வண்டை
இமையிரண்டும்துரத்த!!

இருகூந்தல் சடையதனில்
பெருங்காந்தல் சூட
கருமேகம் என்றெண்ணி
சிறுமயில்கள் ஆட!!!

கண்ணழகி கார்கூந்தல்
பெண்ணழகி இவளோ?
மின்னுகிற இ ணையழகு
மண்ணுலகில் உளதோ?

என்னென்று நான்சொல்ல
மானொத்த அழகு!
விண்ணேறிப் பறக்கிறது
என்கவிதை மனது!!

Tuesday, January 20, 2015

            தீபாவளி!

          வெடி இல்லாத் தீபாவளி--வேண்டும்
          புகை இல்லாத் தீபாவளி!
                                                                                                 
          காசெல்லாம் கரியாக வெடிக்கின்றதே!
          காற்றெல்லாம் மாசாகி கெடுகின்றதே!
          காதெல்லாம் செவிடாகி அடைக்கின்றதே!
          ஊரெல்லாம் பாழாகி கிடக்கின்றதே!

                      வெடி இல்லாத் தீபாவளி--வேண்டும்
                      புகை இல்லாத் தீபாவளி!

          பறவையெல்லாம் பயந்தோடிப் பறக்கின்றதே!
          விலங்கெல்லாம் பாய்ந்தோடிப் பிரிகின்றதே!
          நெஞ்செல்லாம் கரியேறி எரிகின்றதே!
          கண்ணெல்லாம் புகைமேவி அழுகின்றதே!

                      வெடி இல்லாத் தீபாவளி--வேண்டும்
                      புகை இல்லாத் தீபாவளி!

          பச்சிளம் குழந்தைகட்கும் பகையாகுதே!
          மூச்சிரைக்க முதியோரை புகைவாட்டுதே!
          தப்பாமல் விபத்துகள் பலிவாங்குதே!!
          பார்முழுதும் மாசாகிக் கெடுகின்றதே!

          வெடி இல்லாத்தீபாவளி-வேண்டும்
          பலி இல்லாத் தீபாவளி!!
                

பொங்கல் புத்தாண்டுத்திருநாள் வாழ்த்து!!!

 பொங்கல் திருநாள் வாழ்த்து!!!
                         ---------- xxxxx ----------

பொங்கல் புத்தாண்டுத்திருநாள் வாழ்த்து!!!

                         ---------- xxxxx ----------

தை (சுறவம்)பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!- நம்

துன்பமெல்லாம் பறந்துபோகும் தங்கமே தங்கம்!

     உணவைவிட நீர் பெரிது தங்கமே தங்கம்!- அதை

     வீணாகச்செய்ய வேண்டாம் தங்கமே தங்கம்!

ஏரிகுளம் தூர்வாரத் தங்கமே தங்கம்!- நமது

நீர்பஞ்சம் தீர்ந்து போகும் தங்கமே தங்கம்!!

     ஊர்கூடித்தூர்வாரத் தங்கமே தங்கம்!- நம்

     ஒற்றுமையால் நீர்சேரும் தங்கமே தங்கம்!!

மழைநீரைச் சேர்க்க வேண்டும் தங்கமே தங்கம்!- அதை

வீடுதோறும் செய்யவேணும் தங்கமே தங்கம்!

     ஆற்றையெல்லாம் ஒருங்கிணைப்போம் தங்கமே தங்கம்!- அதுக்கு

     அனைவருமே கைகோர்ப்போம்தங்கமே தங்கம்!!

வீட்டுத்தோட்டம் போட்டிடுவோம் தங்கமே  தங்கம்!- நல்ல

காய்கறிகள் விளைவிப்போம் தங்கமே தங்கம்!

     இயற்கை உரம் பயன்படுத்தி தங்கமே தங்கம்!- நாம்

     நஞ்சில்லா உணவுண்போம் தங்கமே தங்கம்!

சாமை ராகி வரகு  திணை தங்கமே தங்கம்!- நாம்

சமையலிலே சேர்த்துண்போம் தங்கமே தங்கம்!

     தமிழர் திருநாளம்மா தங்கமே தங்கம்!- நம்

  சுறவப்பொங்கல் திருநாளாம் தங்கமே தங்கம்!

மொழி உணர்வுவேணுமடி தங்கமே தங்கம்!- தமிழை

உயிரெனவே போற்றிடுவோம் தங்கமே தங்கம்!

     தமிழர்களின் தன்மானம் தங்கமே தங்கம்!- சூட்டும்

     தமிழ்பெயரில் இருக்குதம்மா தங்கமே தங்கம்!

தூயதமிழ் பெயர்வைப்போம் தங்கமே தங்கம்!- வேற்று

மொழிப் பெயரைக் களைந்திடுவோம் தங்கமே தங்கம்!

     தமிழ்மொழியை வளர்த்திடுவோம் தங்கமே தங்கம்!- தமிழ்

     வளர்ந்தால் நாம் உயர்வோம் தங்கமே தங்கம்!

ஆதவனின் சுடரொளியால் தங்கமே தங்கம்!- உலக

உயிர்கலெல்லாம் வாழுதடி தங்கமே தங்கம்!                                               

     காணும்பொங்கல் வைத்திடுவோம் தங்கமே தங்கம்!- அந்தக்

     கதிரவனை வணங்கிடுவோம் தங்கமே தங்கம்!

மாடுகளின் மகத்துவத்தை தங்கமே தங்கம்!- நாம்

மனம் இருத்தி பொங்கல் வைப்போம் தங்கமே தங்கம்!

     வாழ்க்கையதன்தத்துவத்தை தங்கமே தங்கம்!- தந்த

     வள்ளுவனை வணங்கிடுவோம் தங்கமே தங்கம்!

தை (சுறவம்)பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்- நம்

துன்பமெல்லாம் பறந்துபோகும் தங்கமே தங்கம்!!!
புத்தாண்டு நமக்கிதுவே தங்கமே தங்கம்  !!
அதைப்புரிந்து கொண்டாடடியோ
தங்கமே தங்கம் !!