Thursday, June 18, 2015

இதுவா சுதந்திரம்?

ஆயிரங்கோடி இன்பங்கள் தேடி
அனுதினம் மனிதன் தவம் இருந்தான்!
மேவியகோடி துன்பங்கள் சூடி
தினம் தினம் மேனிச்சுகமிழந்தான்!

காரியவாதி ஆகிய மனிதன்
செய்திடும் செயலில் நிலைகுலைப்பான்!
காந்தியவாதி ஆகியமனிதன்
காசின்றிச் செத்தே உயிரிழப்பான்!

தேசியவாதம் பேசிய மனங்கள்
போனது எங்கே நாம்அறியோம்!
தேசியகீதம் பாடிய நாமோ
பாடிய உடனே பொருள் மறந்தோம்!

அரசியல்வாதி எழுதிய கணக்கில்
ஓட்டெனத்தானே நாம் இருப்போம்!
இல்லம் தேடி இலவசம் வந்தால்
ஓட்டெனத்திருப்பி நாம்கொடுப்போம்!

லஞ்சம் வாங்கிச் சேர்த்தான் பொருளெனச்
சொல்லும் யோக்கிதை நமக்கில்லை!
நாட்டைப்பற்றிய கவலை நெஞ்சில்
கொஞ்சம் கூட நமக்கில்லை!

சாதியவாதம் பேசிடும் மனிதன்
நச்சென நம்மை தரம்பிரிப்பான்!
மோதியசாதிக் கலவரங்கண்டு
பாரதமாதா தலை குனிவாள்!!

பெண்ணேகாவல் தெய்வம் நமக்கெனக்
கோவிலில் அழகிய சிலைவைப்போம்
கருவிலிருப்பது பெண்னெனக்கண்டால்
களைத்திட நாமே பணம் கொடுப்போம்!

காசின்றிச்சோறு கோவிலில் உண்டு
கடும்தவம் செய்யத்தேவையில்லை
யாசகம் தனிலேகாசுகள் சேரும்
மதுவதன் போதைக்கு அலைச்சலில்லை!!

உழைப்பின்றிக் காசும் வீடின்றிச்சோறும்
கிடைத்திடக் கழனியில் யார் உழைப்போம்!
ஊருக்கோர் மடம் உறங்கிட வருதாம்
விளைத்திட இனிமேல் யார் போவோம்?  

No comments:

Post a Comment