Saturday, March 28, 2020

கொரோனா பாடம் !

ஆடுகிற ஆட்டமெல்லாம்
ஆடி வந்த மானிடா!
ஓடுகிற ஓட்டமெல்லாம்
ஓடி  முடித்த தேனடா?

காசு பணம் வேண்டுமெனக்
கருணை மனம் சொல்லுதா ?
உயிரு மட்டும் போதுமென்ற
ஞானம் வந்து பிறந்ததா?

குடியும் கூத்தும் போனதா
ஆட்டம் பாட்டம் ஓய்ந்ததா?
அடிதடிகள் மறந்து நெஞ்சில்
ஆணவத் திமிர்  ஒழிந்ததா ?

பந்தபாசம் வேண்டுமென்று
பயத்தில் மனம் வேண்டுதா ?
சொந்தபந்தம் எல்லோரையும்
சொந்தங்கொள்ளத் துடிக்குதா ?

ஆடுகிற ஆட்டம் கண்டு
இயற்கை தந்த அடியிது !
மூடிவைத்த வீட்டுக்குள்ளே
வைத்த சிறைப் படிப்பிது !

ஊரை ஏய்த்து வந்த பணம்
உதவிக்கரம் நீட்டுமா ?
வாங்கிவைத்த லஞ்சப்பணம்
வந்து உன்னைக் காக்குமா?

கோடிகோடியாக நீயும்
கொள்ளை அடித்த பணமெல்லாம்
வீடுதேடி வந்து உன்னை
கொள்ளிவைக்கும் பணமடா!

குடும்பத்தோடு வாழ வைத்த
சூச்சுமந்தான் புரியுதா?
சுற்றுச்சூழல் மூடிவைத்துச்
சொல்லும் சேதி தெரியுதா…

Monday, March 23, 2020

நலம் வாழ ஒரு பாட்டு !

நலம் வாழ ஒரு பாட்டு !
—�—�—�—�—�—�—�-:—�—�—�—�—�—�
பாட்டு ஒன்று பாடப்போறேன்
பக்குவமா கேட்டுக்கோ
பாட்டை நீயும் பாடிப்பார்த்து
பாதுகாப்பா வாழ்ந்துக்கோ

யாரை நீயும் தொடாதே
உன்னைத் தொட விடாதே
கையைக்கொடுத்து குலுக்காதே
கட்டி நீயும் அனைக்காதே !

தாயைத்தவிர குழந்தையை
யாரும் தொடக்கூடாது
தொட்டுத்தூக்கிக் குழந்தைக்கு
முத்தந்தரக் கூடாது !

மூக்கை மறைத்துத் தும்மணும்
வாயைப்பொத்தி இருமணும்
கண்ட இடத்தில் துப்பாதே
செருப்பு இன்றி நடக்காதே!

கூட்டம் கூடும் இடத்திலே
கூடி நீயும் நிற்காதே
சோப்பு போட்டு கையினை
கழுவ நீயும் மறக்காதே !

எந்த பொருளும் இரவலாய்
யாரிடமும் வாங்காதே
உந்தன்பொருளை யாவருக்கும்
பயன் படுத்தத் தராதே !

சளி பிடித்த நபரிடம்
நெருங்கி நீயும் போகாதே
சளியைத் தரும் உணவினை
வாங்கி நீயும் உண்ணாதே!

தொற்று நோய்கள் பரவிட
தோதாய் ஏதும் செய்யாதே
காற்றை மாசு ஆக்கிடும்
கரும்புகையை மூட்டாதே !

பாட்டு ஒன்று பாடப்போறேன்
பக்குவமா கேட்டுக்கோ
பாட்டை நீயும் பாடிப்பாத்து
பாதுகாப்பா வாழ்ந்துக்கோ !

Wednesday, March 11, 2020

தாலாட்டு !!!

ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
பெத்தபுள்ளே நான் உனக்கு,
சொத்து சுகம் சேத்துவைப்பேன்--அத
கட்டிக்காத்து வாழ்ந்திடவே,
பட்டறிவும் சொல்லிவெப்பேன்!
பட்டறிவு நான் பெறவே
பட்ட அடி போதுமையா! கத்ததெல்லாஞ் சொல்லித்தாறேன்,
பக்குவமா கேட்டுக்கையா !
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
சொத்து பத்து அத்தனையையும்
சேத்து நீயும் வச்சிருந்தா,
சொந்தபந்தம் தேடிவந்து,
சேர்ந்து புகழ் பாடுமையா!
வித்து அதை நீ இழந்து,
சோகத்திலே தேய்ந்திருந்தா,
பெத்துப்பொறப்பு கூட உன்னை
பித்தனைப்போல் பாக்குமைய்யா !
ஆடிக்காத்தில் அம்மிக்கல்லும்
ஆட்டங்கண்டு போவதுபோல்,
பந்தபாச சொந்தமெல்லாம்
பேசி உன்னைக் கொல்லுமையா
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
குத்தங்குறை சொல்லி நித்தம்,
குத்துயிரா ஆக்குமையா
முத்திப்போனகத்திரியாய்
மூலையிலே வீசுமையா !
விட்டகுறை தொட்டகுறை,
என்று கதை கட்டுமையா
பட்டஅடி போதுமென்று,
பரிதவிக்க ஓட்டுமையா!
துன்பமுண்டு துயரமுண்டு
பூமியிலே நாம் பொறந்தா
என்பதனை நீ உணர்ந்து
ஏற்றமுடன் வாழோணும்..
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ !
சூதுவாது இல்லாத
சுத்தமாக வாழோணும்
காலையிலே நீ எழுந்து
உன் தொழிலைப் பாக்கோணும்!
ஊருச்சொத்து வேண்டாமுன்னு
உறுதி மனம் கொள்ளோணும்
ஊருக்கு நீ உதவிசெஞ்சு
உத்தமனாய் வாழோணும்!
ஊருலகம் நூறு சொல்லும்
உதறிவிட்டு நானுனக்கு
சொல்லித்தந்த பாடங்கேட்டு
பக்குவமா வாழோணும் !
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ .