Saturday, March 28, 2020

கொரோனா பாடம் !

ஆடுகிற ஆட்டமெல்லாம்
ஆடி வந்த மானிடா!
ஓடுகிற ஓட்டமெல்லாம்
ஓடி  முடித்த தேனடா?

காசு பணம் வேண்டுமெனக்
கருணை மனம் சொல்லுதா ?
உயிரு மட்டும் போதுமென்ற
ஞானம் வந்து பிறந்ததா?

குடியும் கூத்தும் போனதா
ஆட்டம் பாட்டம் ஓய்ந்ததா?
அடிதடிகள் மறந்து நெஞ்சில்
ஆணவத் திமிர்  ஒழிந்ததா ?

பந்தபாசம் வேண்டுமென்று
பயத்தில் மனம் வேண்டுதா ?
சொந்தபந்தம் எல்லோரையும்
சொந்தங்கொள்ளத் துடிக்குதா ?

ஆடுகிற ஆட்டம் கண்டு
இயற்கை தந்த அடியிது !
மூடிவைத்த வீட்டுக்குள்ளே
வைத்த சிறைப் படிப்பிது !

ஊரை ஏய்த்து வந்த பணம்
உதவிக்கரம் நீட்டுமா ?
வாங்கிவைத்த லஞ்சப்பணம்
வந்து உன்னைக் காக்குமா?

கோடிகோடியாக நீயும்
கொள்ளை அடித்த பணமெல்லாம்
வீடுதேடி வந்து உன்னை
கொள்ளிவைக்கும் பணமடா!

குடும்பத்தோடு வாழ வைத்த
சூச்சுமந்தான் புரியுதா?
சுற்றுச்சூழல் மூடிவைத்துச்
சொல்லும் சேதி தெரியுதா…

Monday, March 23, 2020

நலம் வாழ ஒரு பாட்டு !

நலம் வாழ ஒரு பாட்டு !
—�—�—�—�—�—�—�-:—�—�—�—�—�—�
பாட்டு ஒன்று பாடப்போறேன்
பக்குவமா கேட்டுக்கோ
பாட்டை நீயும் பாடிப்பார்த்து
பாதுகாப்பா வாழ்ந்துக்கோ

யாரை நீயும் தொடாதே
உன்னைத் தொட விடாதே
கையைக்கொடுத்து குலுக்காதே
கட்டி நீயும் அனைக்காதே !

தாயைத்தவிர குழந்தையை
யாரும் தொடக்கூடாது
தொட்டுத்தூக்கிக் குழந்தைக்கு
முத்தந்தரக் கூடாது !

மூக்கை மறைத்துத் தும்மணும்
வாயைப்பொத்தி இருமணும்
கண்ட இடத்தில் துப்பாதே
செருப்பு இன்றி நடக்காதே!

கூட்டம் கூடும் இடத்திலே
கூடி நீயும் நிற்காதே
சோப்பு போட்டு கையினை
கழுவ நீயும் மறக்காதே !

எந்த பொருளும் இரவலாய்
யாரிடமும் வாங்காதே
உந்தன்பொருளை யாவருக்கும்
பயன் படுத்தத் தராதே !

சளி பிடித்த நபரிடம்
நெருங்கி நீயும் போகாதே
சளியைத் தரும் உணவினை
வாங்கி நீயும் உண்ணாதே!

தொற்று நோய்கள் பரவிட
தோதாய் ஏதும் செய்யாதே
காற்றை மாசு ஆக்கிடும்
கரும்புகையை மூட்டாதே !

பாட்டு ஒன்று பாடப்போறேன்
பக்குவமா கேட்டுக்கோ
பாட்டை நீயும் பாடிப்பாத்து
பாதுகாப்பா வாழ்ந்துக்கோ !

Wednesday, March 11, 2020

தாலாட்டு !!!

ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
பெத்தபுள்ளே நான் உனக்கு,
சொத்து சுகம் சேத்துவைப்பேன்--அத
கட்டிக்காத்து வாழ்ந்திடவே,
பட்டறிவும் சொல்லிவெப்பேன்!
பட்டறிவு நான் பெறவே
பட்ட அடி போதுமையா! கத்ததெல்லாஞ் சொல்லித்தாறேன்,
பக்குவமா கேட்டுக்கையா !
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
சொத்து பத்து அத்தனையையும்
சேத்து நீயும் வச்சிருந்தா,
சொந்தபந்தம் தேடிவந்து,
சேர்ந்து புகழ் பாடுமையா!
வித்து அதை நீ இழந்து,
சோகத்திலே தேய்ந்திருந்தா,
பெத்துப்பொறப்பு கூட உன்னை
பித்தனைப்போல் பாக்குமைய்யா !
ஆடிக்காத்தில் அம்மிக்கல்லும்
ஆட்டங்கண்டு போவதுபோல்,
பந்தபாச சொந்தமெல்லாம்
பேசி உன்னைக் கொல்லுமையா
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
குத்தங்குறை சொல்லி நித்தம்,
குத்துயிரா ஆக்குமையா
முத்திப்போனகத்திரியாய்
மூலையிலே வீசுமையா !
விட்டகுறை தொட்டகுறை,
என்று கதை கட்டுமையா
பட்டஅடி போதுமென்று,
பரிதவிக்க ஓட்டுமையா!
துன்பமுண்டு துயரமுண்டு
பூமியிலே நாம் பொறந்தா
என்பதனை நீ உணர்ந்து
ஏற்றமுடன் வாழோணும்..
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ !
சூதுவாது இல்லாத
சுத்தமாக வாழோணும்
காலையிலே நீ எழுந்து
உன் தொழிலைப் பாக்கோணும்!
ஊருச்சொத்து வேண்டாமுன்னு
உறுதி மனம் கொள்ளோணும்
ஊருக்கு நீ உதவிசெஞ்சு
உத்தமனாய் வாழோணும்!
ஊருலகம் நூறு சொல்லும்
உதறிவிட்டு நானுனக்கு
சொல்லித்தந்த பாடங்கேட்டு
பக்குவமா வாழோணும் !
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ .

Wednesday, August 22, 2018

                                ஆண்விடுதலை!
                         ---------------------
கவி பாரதியே
அன்று
வேண்டும் சுதந்திரம்
பெண்களுக்கென்று
வேண்டி வேண்டி
பாடிவிட்டு
நீ
போய் சேர்ந்துவிட்டாய்!
இன்று
முழுச் சுதந்திரத்தையும்
கொடுத்துவிட்டு
சோதனைச்சிறையில்
வாடும் எங்களுக்கு
சுதந்திரம் வேண்டிப்பாட
நீ எப்போது வருவாய்?    

Wednesday, June 13, 2018

தாய்க்கு ஒரு தாலாட்டு !!!

                         தாய்க்கு ஒரு தாலாட்டு !!!
                                   ------௦௦௦--------
கட்டையிலே உனை வைத்து
கருந்தீயில் சுட்டபோது
வெந்த துந்தன்மேனியில்லைநானம்மா!-நீ
பட்ட துன்பம் அத்தனையும்
பெருந்தீயில் கரைந்துவிட
நிம்மதியாய் நீ சென்று தூங்கம்மா!

அன்புருக எனை அனைத்து
நெஞ்சுருகப்பால் கொடுத்துத்
தந்த தெந்தமேனி உயிர்நீயம்மா!- பாசப்
பண்பொழுக   எனைச்சுமந்து 
பாசமுடன் எனை வளர்த்து
பரிதவிக்க விட்டதுதான் ஏனம்மா?

எனக்காகச்  சமைத்தெடுத்து
வரும் நேரம் காத்திருந்து
விருந்தாக நீயெனக்குப்படைப்பாயே!-அந்த
விருந்துண்டு நான்தூங்க
இரவெல்லாம் பாத்திருந்து
எனக்காக உன் தூக்கம் தொலைப்பாயே!

ஏனம்மா   எனைமறந்து
உன்னுயிரைத்தான் துறந்து
போனதெங்கே நீயெனக்கு சொல்லம்மா!- தனி
ஆனதம்மா  என் மனது
அழுகுதம்மா உனை இழந்து
வாழ்வதெங்கெ நீயின்றி சொல்லம்மா?

உனக்கெனவே ஒரு நாளும்
வாழாத இவ்வுலகில்
உழைத்த திங்கு போதுமென்றுபோனாயோ!- உன்
குருதி யெல்லாம் எனக்களித்து
உறுதி கொண்ட உடல் கொடுத்து
இறுதியாக நீயெங்கு போனாயோ?

உனை நினைத்து வாழ்வேனா
அழுதழுது தேய்வேனா
ஊனுறக்கம் இல்லாமல் மாய்வேனா?- நீ
தருமன்பைத் தினம் நினைந்து
கருனைவிழி தனை இழந்து
தனிமையிலேநான்வாழ்ந்து உய்வேனா?

பெற்றெடுத்த பிள்ளையெனை
பரிதவிக்க விட்டு உன்னைப்
பெற்றவரின் மடிதூங்கப்போனாயோ?-இந்த
நிலையில்லா வாழ் வதிலே
நித்தமொரு நிலை மாறும்
என்பதனை எனக்குரைத்துப் போனாயோ?

போதும் அம்மா போதுமிந்த
பூமியிலே பட்டதெல்லாம்
பூலோகம் மறந்து நீயும் தூங்கம்மா!- நீ
பட்ட துன்பம் அத்தனையும்
இட்ட தீயில் கறைந்துவிட
நிம்மதியாய் நீ சென்று தூங்கம்மா!!

Sunday, September 6, 2015

இனிய பிறந்தநாள் வாழ்த்து!!!

வாழிய வாழிய பல்லாண்டு
வளம்பெறவேண்டும் அன்போடு
இன்பங்கள் வந்துடன்தங்கிடவும்
துன்பங்கள் தூர விலகிடவும்,

எண்ணிய எண்ணங்கள் ஈடேறி
என்றும் வாழ்வில் மகிழ்ந்திடவும்
வரும்நாள் எல்லாம் வளமாக
மனநலம் என்றும் சிறப்பாக!

பொன்தமிழாலே கவிபாடி
பொதுநல வாழ்வில் புகழ்சூடி
கண்ணிமை காக்கும் கருனையுடன்
வாழ்ந்திட நானும் வாழ்த்துகிறேன்!!
 இனிய பிறந்த நாள் வாழ் த்துக்கள்!!!

Sunday, August 23, 2015

கலாமின் கனவை நனவாக்க!!

கலாமின் கனவை நனவாக்க!!
                             .......0.........
அனுதினம் கனவு காண்கலாம்
அவைகளை நனவாய் ஆக்கலாம்!
வாருங்கள் அறிவுரை கேட்கலாம்
உழைத்திடும் கைகளை கோற்கலாம்!

வீட்டினில் மரங்களை வளர்க்கலாம்
நாட்டிற்கு அனைவரும் உழைக்கலாம்!
அக்கினிச் சிறகினை விரிக்கலாம்
வல்லரசாய்  நாம்  உதிக்கலாம்!

வாருங்கள் நாம் பசி தணிக்கலாம்
உலகில் நம்நிலை கனிக்கலாம்!
ஏனிந்த நிலையென நினைக்கலாம்
அதைமாற்றிடத் தினமும் உழைக்கலாம்!

சாதிகள் மதங்களை வெறுக்கலாம்
சமத்துவ விதைகளை விதைக்கலாம்!
அனைவரும் சம்மென மதிக்கலாம்
அதற்கென வழிமுறை விதிக்கலாம்!

பிரிவினை வாதத்தை ஒதுக்கலாம்
ஒற்றுமை உயர்வென போதிக்கலாம்!
நாட்டில் நதிகளை இணைக்கலாம்
விளையும் பொருள்களை பெருக்கலாம்!

இதைத்தான் சொன்னார் அப்துல்கலாம்
அவர்சொன்னதைச் செய்தால் சாதிக்கலாம்!
கனவினை நனவாய் ஆக்கலாம்
பெரும்புகழ் நமக்கே சேர்க்கலாம்!!