Saturday, March 1, 2014

                                     ஏன் இந்த மாற்றம்!!!!
                                              ----------------

மும்மாரி  பொழிந்ததெங்கள்  வானம்!  -இன்று
திசைமாறிப்  போனதேனோ  மேகம்?
கல்மாரி  விழுந்த தெல்லாம்  போச்சு!  -குளிர்
காற்றுகூட  வெப்பக்கதிர்  ஆச்சு!

         முப்போகம்  விளைந்த தெங்கள்  பூமி!  -இன்று
          முட்புதராய்ப்  போனதேனோ  சாமி?
          முக்கனிகள்  தந்தநல்ல  மரங்கள் -விறகாய்
          எரிந்ததாலோ  இன்று இந்த  வினைகள்?

விளைநிலத்தை  வீடாக்கி  வைத்து - அதில்
வீசுதென்றல்  தனைச்சேர்த்துப்  புதைத்து!
காய்கறிகள்  பயிர்செய்ய வளர்த்து -அதில்
கடும்நஞ்சை  உரமாகத்  தெளித்து!

          நிறம்மாற்றி  வைத்துவிட்டோம்  நீரை -அமைதி
          நிலைமாற்றிக்  கதறவிட்டோம்  ஊரை!
         கரைமாற்றிக்  கட்டிவிட்டோம்  நதியை!  -குப்பைக்
          குளமாக்கி  வைத்துவிட்டோம்  கடலை!

கறும்புகையால்  காற்றில்  மாசைக்  கூட்டி -உச்சி
வான்துளைக்க  வீசிவைத்தோம்  ஈட்டி!
மனிதமெனும்  மாட்ச்சிமையை  மறந்து  -சுய
நலமதுவே  வாழ்க்கையென  நினைந்து!

          அச்சமடம்  மானமதை  மறந்து  - தமிழன்
          உச்சமெனும்  பெரும்புகழை  துறந்து!
          குணம்மாறிப்  போனதம்மா  வாழ்க்கை -அதனால்
          திசைமாறிப்  போனதம்மா இயற்கை!!!